டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீரா பாய்க்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 49 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு சைகோம் (26) நேற்று முன்தினம் வெள்ளி பதக்கம் வென்றார். அவர் ஆட்டத்தின் முடிவில் ஸ்நாச் முறையில் 87 கிலோவும், கிளீன் அன்டு ஜெர்க் முறையில் 115 கிலோவும் தூக்கினார். மொத்தம் 202 கிலோ தூக்கி ஆட்டத்தில் 2வது இடம் பிடித்தார். சீனாவின் ஹு ஜிஹுய் மொத்தமாக 219 கிலோ தூக்கி தங்கம் வென்றார். கூடவே ஸ்நாச் முறையில் 94 கிலோ தூக்கி புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்தார்.
மீராபாய் சானுவின் வெற்றியை தங்களது வெற்றியாகக் கருதி இந்திய மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.இந்த நிலையில், 49 கிலோ பளுதூக்குதல் போட்டியில் முதலிடம் பிடித்த சீன வீராங்கனை ஹு ஜிஹுய்க்கு ஊக்க மருந்து பரிசோதனை செய்யப்படுகிறது. அவர் ஊக்க மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால் அவரிடமிருந்து தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டு இரண்டாம் இடத்தை பிடித்த மீராபாய்க்கு கொடுக்கப்படும். சீன வீராங்கனைக்கு பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் மீரா பாய்க்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.