இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு பாறைகள் உருண்டு விழுந்து 9 சுற்றுலா பயணிகள் பலி

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுற்றுலா பயணிகள் 9 பேர் பலியாகினர். இமாச்சல பிரதேசம் கின்னார் மாவட்டம் பட்செரி கிராமத்தில் உள்ள மலைப் பகுதியில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்தன. இதில், சுற்றுலா பயணிகள் பயணம் செய்த டெம்போ டிராவலர் வாகனம் ஒன்று,  பெரிய பாறைகள் விழுந்ததில் நசுங்கியது. இதில்  சிக்கிய சுற்றுலா பயணிகளில் 9 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இறந்தவர்கள் அனைவரும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களை சேர்ந்தவர்கள். காயமடைந்த 3 பேரும் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர்கள். நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் மீட்பு பணி நடக்கிறது. மேலும், அந்த பகுதியில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலமும் பெரிய பாறை விழுந்ததில் நொறுங்கி உடைந்தது. நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

Related Stories: