மாம்பழப்பட்டு கிராமத்தில் முத்தாலம்மன் கோயிலில் ஆடிவெள்ளி தேர் திருவிழா

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், மாம்பழப்பட்டு கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி திருவிழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து அலகு குத்துதல், புலி வேடம், குறவன், குறத்தி வேடம், சாமிகள் வேடம் மற்றும் பல்வேறு வேடங்களுடன் அம்மனின் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டத்தில் முதுகில் அலகு குத்தி வாகனங்களில் கட்டி தேர் இழுத்தும், தூக்குத்தேர் தூக்கியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியதுடன், கோயிலில் அக்னி சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தும் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

காலை 7 மணியளவில் பக்தர்களுக்கு சின்ன ஊசி குத்துதல், மதியம் 12 மணியளவில் தேர் திருவிழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து முத்துமாரியம்மன் திருவீதியுலா நடைபெற்றது. வாணவேடிக்கையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி ஊர்வலம் நடந்தது. இறுதியில் மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்பட்டு தெப்பக்குளத்தில் முளைப்பாரி விடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுற்றது. இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முத்துமாரியம்மனின் தரிசனம் பெற்று சென்றனர்.

Related Stories: