மன்னார்குடியிலிருந்து பொள்ளாச்சி, புதுக்கோட்டைக்கு அரவைக்கு 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

மன்னார்குடி : மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு 1000 டன், புதுக்கோட்டைக்கு 1000 டன் என மொத்தம் 2,000 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக தனித்தனி சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசால் அங்கீரிக்கப்பட்ட அரவை மில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரயில்கள் மூலம் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பணிகள் நடை பெற்று வருகிறது.

இந்நிலையில், மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு லாரிகளில் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் இறக்கி சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றினர். பின்னர், 21 வேகன்களில் ஏற்றப்பட்ட ஆயிரம் மெட்ரிக் டன் நெல் பொள்ளாச்சிக்கும், மற்றொரு 21 வேகன்களில் ஏற்றப்பட்ட ஆயிரம் மெட்ரிக் டன் நெல் புதுக்கோட்டைக்கும் அரவைக்காக தனித்தனி சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சுமைதூக்கும் பணியாளர்கள் ஈடு பட்டனர்.

இப்பணிகளை நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மே லும், பணியில் ஈடுபட்ட சுமைதூக்கும் பணியாளர்களிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்து கூறியதோடு முக கவசம் அணியாதவர்கள் பணியில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறினார்.

Related Stories: