ஆவடி அருகே பரபரப்பு: பள்ளி மாணவி கர்ப்பம்; வாலிபருக்கு வலை

ஆவடி: ஆவடி அருகே திருமண ஆசைகாட்டி பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகர் மெயின் ரோட்டில் ஒரு தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் இவர்களது உறவினரான ஜோதி (24) என்ற வாலிபர், கடந்த ஒரு ஆண்டாக சிறுமியை காதலித்து வந்துள்ளார்.  கடந்த பிப்ரவரி மாதம் சிறுமி வீட்டில் அவரது பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் சென்ற ஜோதி,  திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்த விசயம் தற்போது தெரிய வந்தது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்த  ஜோதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள ஜோதியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: