புதுடெல்லி: இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அளித்த அனுமதியை தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பாடங்களை தொடங்குவதற்கு 14 கல்லூரிகள் அனுமதி பெற்றுள்ளன. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, வரும் கல்வியாண்டில் இருந்து பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வி பயிற்றுவிக்கப்படும் என ஒன்றிய கல்வி அமைச்சகம் கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிவித்தது. மேலும், தமிழ் உட்பட 11 பிராந்திய மொழிகளில் பாடங்களை அறிமுகம் செய்யவும் சமீபத்தில் அனுமதி அளித்தது. இதை பின்பற்றி, தாய்மொழி வழி கல்வி கற்பதை ஊக்கப்படுத்தும் வகையில், 8 மாநிலங்களில் உள்ள 14 பொறியியல் கல்லூரிகள், இந்த கல்வியாண்டு முதல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, அசாமி, பஞ்சாபி, ஒரியா, இந்தி ஆகிய 11 பிராந்திய மொழிகளில் பி.டெக் பயிற்றுவிக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் அனுமதியை பெற்றுள்ளன.