திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றவர்கள் மீது மினி லாரி மோதியதில் சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும், 9 பேர் படுகாயம் அடைந்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்னை ஆவடி அடுத்த வெள்ளச்சேரியை சேர்ந்த 15 பக்தர்கள் கடந்த 17ம் தேதி பாத யாத்திரையாக புறப்பட்டனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வடமாலைப்பேட்டை அருகே நேற்றுமுன்தினம் அதிகாலை 4 மணியளவில் வந்தபோது பின்னால் வந்த மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதியது. இதில் பக்தர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். மேலும் தகவலறிந்த வடமாலைப்பேட்டை போலீசார் அங்கு வந்தனர்.