சென்னை: தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தினை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இத்திட்டம் கடந்த ஆட்சி காலத்தில் இருந்தே, குறிப்பாக 2018ம் ஆண்டு முதல் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எண்ணூர்-மணலி குழாய் பதிக்கும் பணிகள் முடிவுபெற்று இத்திட்டம் கடந்த 6.3.2019 அன்று பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதேபோன்று, ராமநாதபுரம்-தூத்துக்குடி குழாய் பதிக்கும் திட்டம் கடந்த 17.2.2021 அன்று பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்த நிகழ்வின்போது அப்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றதை நினைவுகூர விரும்புகிறேன்.