சேலம்: சேலம் சுற்றுப்புற மாவட்டங்களில் ஆடி முதல்நாளில் நடக்கும் பிரசித்தி பெற்ற தேங்காய் சுடும் நிகழ்வு நேற்று கோயில்கள், வீடுகளில் உற்சாகத்துடன் நடந்தது. யுத்தகாலம் என்று அழைக்கப்படும் ஆடி மாதம், தமிழ் மாதத்தின் நான்காவது மாதமாக உள்ளது. மாரியம்மன் வழிபாட்டுக்கு உகந்த இந்த மாதத்தை அம்பாள் மாதம் என்றும் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். ஆடிவெள்ளி, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை என்று அனைத்து நாட்களும் இந்த மாதத்தில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தின் முதல்நாளில், சேலம் மண்டலத்தில் முக்கிய கொண்டாட்டமாக இருப்பது தேங்காய் சுடும் நிகழ்வு. ஒரு தேங்காயை எடுத்து, அதன் மேலுள்ள நார்களை அகற்றி விட்டு கண்களை துளையிடுவர். தேங்காயிலிருந்து தண்ணீரை அகற்றி விட்டு தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல் கலந்த கலவையை போட்டு கூரிய முனை கொண்ட அழிஞ்சி குச்சியில் சொருகுவர். பின்னர், அந்த குச்சியை சுற்றி மஞ்சளை பூசி துளையை அடைப்பர். பின்னர் ஓரிடத்தில் நெருப்பு மூட்டி குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை சுடுவர். இதனை வீட்டருகில் உள்ள பிள்ளையார் கோயில்களுக்கு எடுத்துச் சென்று வழிபட்டு உடைத்து, அனைவருக்கும் வழங்குவர்.