சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி இங்கு நடைபெறும் உட்கட்சி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுத்து வருகிறார். இப்பிரச்னைக்கு தீர்வு காண மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மாநிலத்தின் எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள், முதல்வர் அமரீந்தர் சிங், அதிருப்தி தலைவர் சித்து ஆகியோரை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கட்சித் தலைமையிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. அக்குழு சித்துக்கு துணை முதல்வர் பதவி, தலித் தலைவர்களுக்கு பதவி உள்பட பல்வேறு பரிந்துரைகளை தெரிவித்தது. இதனிடையே, அமரீந்தர் சிங், சித்து ஆகியோர் ராகுல், பிரியங்கா காந்தியை தனித்தனியே நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.