வாடகை கேட்டதால் ஆத்திரம் வீட்டு உரிமையாளரின் மகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை வினோபா நகர் பகுதியை சேர்ந்தவர் நஜூகான்(31). வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர், கடந்த 3 மாதமாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் வீட்டு உரிமையாளர், நஜூகானிடம் வாடகை பணத்தை தரும்படி கேட்டுள்ளார். வாடகை பணத்தை கேட்டு அடிக்கடி வீட்டு உரிமையாளர் தொல்லை கொடுத்ததால், ஆத்திரமடைந்த நஜூகான், வீட்டு உரிமையாளரின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையறிந்த வீட்டு உரிமையாளர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது, நஜூகான் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நஜூகானை தேடிவந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை வினோபா நகர் பகுதிகளில் சுற்றித்திரிந்த நஜூகானை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனர். புகாரின்படி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் நஜூகானை போக்சோவில் கைது செய்தனர்.

Related Stories: