ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்: 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ஆனிவார ஆஸ்தானம், யுகாதி பண்டிகை, ஆண்டு பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகியவற்றுக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மை பணி) நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு வரும் 16ம் தேதி ஆனி வார ஆஸ்தானம் நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று காலை 6 மணியளவில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. மூலவர் ஏழுமலையான் மீது பட்டு வஸ்திரம் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கல் மண்டபங்கள், தங்க கொடிமரம் உள்ளிட்ட அனைத்து இடங்களும், புனித தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.

பின்னர் பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கட்டி கற்பூரம், மூலிகை திரவியங்கள் கொண்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மூலவர் மீது சாத்தப்பட்ட பட்டு வஸ்திரம் அகற்றி சிறப்பு பூஜை செய்யப்பட்டு சுவாமிக்கு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்காக பக்தர்கள் தரிசனம் 5 மணிநேரம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து காலை 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் செயல் அதிகாரி ஜவகர், கூடுதல் செயல் அதிகாரி தர்மா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.

Related Stories: