வீராணம் ஏரியை வந்தடைந்தது காவிரி நீர்: 10 நாட்களில் முழு கொள்ளளவை எட்டும்

காட்டுமன்னார்கோவில்: வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக காவிரி நீர் வந்தடைந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  கடந்த ஜூன் மாதம் 12ல் முதல்வர் மு.க.ஸ்டாலின், பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இதையடுத்து 17 நாட்களுக்கு பிறகு தஞ்சை மாவட்டம் கீழணைக்கு காவிரி நீர் வந்தது. அணைக்கு நீர்வரத்து 750 கன அடியாக இருப்பதால், அணையின் பாதுகாப்பு கருதியும் மேலும் வீராணம் ஏரியை நிரப்பும் பொருட்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கீழணையில் அமைந்துள்ள வடவாறு தலைப்பில் 537 கனஅடி தண்ணீரை நேற்றுமுன்தினம் வீராணம் ஏரிக்கு திறந்து விட்டனர்.

நேற்று காலை வீராணம் ஏரிக்குள் தண்ணீர் வந்தது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், கீழணைக்கு தண்ணீர் வரத்தின் அதிகரிப்பால் வீராணம் ஏரியை  நிரப்புவதற்காக தண்ணீர் திறந்துள்ளோம். அடுத்த 10 நாட்களில் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு ஏரியை சுற்றியுள்ள 27 பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கும் அரசு விழா அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறும்.

இதனால் நடப்பாண்டு வீராணம் பாசனத்தில் உள்ள சம்பா மற்றும் குறுவை நெற்பயிர்களின் பாசன தேவை பூர்த்தியடையும். மேலும் வெற்றிலை, மீன்பிடி தொழில்கள் சிறப்பாக அமையும், என்றனர். வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: