சேலம்: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.1.56 உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் ஏற்பட்ட விலையேற்றத்தால், தமிழகத்தின் 18 மாவட்டங்களில் ரூ.102ஐயும், 2 மாவட்டங்களில் ரூ.103ஐயும் கடந்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இம் மாதத்தில் நேற்றைய தினம் 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினர். இதன்மூலம் இந்த ஒரு வாரத்தில் மட்டும் பெட்ரோல் ரூ.1.56ம், டீசல் 42 காசும் உயர்ந்துள்ளது. நேற்று பெட்ரோல் 31 காசும், டீசல் 8 முதல் 10 காசும் அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.06க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று 31 காசு உயர்ந்து ரூ.101.37 ஆக விற்கப்பட்டது. டீசல் விலை ரூ.94.06ல் இருந்து 9 காசு உயர்ந்து ரூ.94.15 ஆக அதிகரித்தது.