பிரிந்து வாழ்ந்த மனைவியுடன் பேசியதால் ஆத்திரம்: ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து; கூலித்தொழிலாளி அதிரடி கைது

அண்ணாநகர்: கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டாக பிரிந்து வாழும் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய கூலிதொழிலாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (32).  கூலித்தொழிலாளி. இவரது மனைவி நித்தியா (26). இவர்களுக்கு 3 குழந்தைகள். கணவன் - மனைவியிடையே கருத்துவேறுபாடு காரணமாக  கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் சிவகுமார் மனைவி நித்தியாகோயம்பேடு 100 அடி சாலை பகுதியில் வசிப்பதை அறிந்து அவரைப் பார்க்க நேற்று மாலை 4 மணி அளவில் அங்கு சிவகுமார் சென்றுள்ளார்.

அப்போது நித்தியா  அங்கு ஆட்டோ டிரைவர் ஒருவருடன்  பேசிக் கொண்டிருப்பதை பார்த்த சிவகுமார் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த  நபரை  சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டார். தகவலறிந்த கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த நபரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் 16 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பூ மார்க்கெட்டில் பதுங்கியிருந்த சிவகுமாரை கைது செய்தனர்.

விசாரணையில், எனது மனைவியுடன் பேசிக்கொண்டிருந்ததால் சந்தேகமடைந்து  கத்தியால் குத்தினேன் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து சிவக்குமாரிடம் இருந்து பட்டாக்கத்தி மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார்  பறிமுதல் செய்தனர். மேலும்,  கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த நபர் சென்னை பட்டபிராம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சக்கரவர்த்தி (41) என்பது தெரியவந்தது. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: