மேகதாது அணை கட்டுவது தமிழ்நாட்டை பாதிக்காது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்!

பெங்களூரு: மேகதாது அணை கட்டுவது தமிழ்நாட்டை பாதிக்காது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது.

மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இக்கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழக முதலமைச்சருக்கு கர்நாடக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அதில்; மேகதாது அணை கட்டுவது தமிழ்நாட்டை பாதிக்காது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காது என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

மேகதாது அணை கட்டுவது கர்நாடக மாநிலத்தின் நீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், இரு மாநிலத்தின் நீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் மட்டுமே என்றும் இந்த அணை கட்டுவதால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, இரு மாநிலத்தின் நன்மை மற்றும் விவசாயிகளின் நன்மைக்காகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதே நேரத்தில், காவிரியில் தமிழக அரசு ( குந்தா மற்றும் சிலஹல்லா) இரண்டு நீர் மின் நிலைய திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். இதற்காக இதுவரை தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

அதேபோன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் மேட்டூர் அணைக்குக் கீழ் தமிழக சிறு சிறு நீர் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது, ஆனால் இதற்கும் இதுவரை கர்நாடக அரசுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எனவே, இரு மாநில நலனுக்காகக் கட்டப்படும் மேகதாது அணைக்கும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். என்ன பிரச்சனையாக இருந்தாலும் இரு மாநில அரசும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும்; அதற்காக இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எடியூரப்பா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: