புரெவி புயலால் சேதமடைந்த நாகூர் தர்கா குளம் சீரமைப்பு பணி

நாகை: புரெவி புயலால் சேதமடைந்த நாகூர் தர்கா குளம் ரூ5.37 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நிவர் மற்றும் புரெவி புயல் எதிரொலியால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதில் பல லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் சேதமடைந்தது. இந்நிலையில் நாகூரில் உள்ள புகழ்பெற்ற தர்காவிற்கு சொந்தமான தர்கா குளத்தின் தென்கரை, வடகரை, மேல்கரை மற்றும் கீழ்கரை பகுதிகளில் உள்ள சுவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி இடிந்து விழுந்தது.

நகராட்சி நிர்வாகம் மணல் மூட்டைகளை அடுக்கி மேலும் சேதம் ஏற்படாமல் சீர் செய்தது. இந்நிலையில் தொடர் மழையில் சேதமடைந்த நாகூர் தர்கா குளத்தை சீர்செய்ய ரூ.5.37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ரூ.4.37 கோடி மதிப்பில் நாகூர் தர்கா குளத்தை சீர் செய்யும் பணி மற்றும் ரூ.1 கோடி மதிப்பில் குளத்தை சுற்றி நடைபாதை அமைக்க திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குளத்தில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு குளத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் 6 மாத காலத்திற்குள் பணியை முடிப்பதற்காக பொதுப்பணித்துறையினர் இரவு, பகலாக பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: