கட்சிக்காரருக்கு பணிகேட்டு நகராட்சி ஆணையரை எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் மிரட்டல்: திண்டிவனத்தில் அராஜகம்

திண்டிவனம்: மின்மயானம் செப்பனிடும் பணியை அதிமுகவினருக்கு வழங்க கோரி திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையரை அதிமுக எம்எல்ஏ தலைமையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டினர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் மற்றும் அதிமுகவினர் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷாவை சந்திக்க வந்தனர். அப்போது ஆணையர் வெளியில் சென்றிருந்ததால் அவரது அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் தலைமையில் அதிமுகவினர் தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த நகராட்சி ஆணையர் சட்டமன்ற உறுப்பினரை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றார். அப்போது திண்டிவனம் மின் மயானத்தை செப்பனிடுவதற்கு கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர் சண்முகம் நிதி ஒதுக்கியதாகவும், எனவே அந்த மின் தகன மேடை செப்பனிடும் பணியை அதிமுகவினரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மிரட்டினர். இதனை ஏற்க நகராட்சி ஆணையர் மறுத்ததால் அவரை அதிமுகவினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

Related Stories: