கோபா அமெரிக்கா கால்பந்து கால்இறுதி: நாளை அதிகாலை பிரேசில்-சிலி மோதல்

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் நடந்து வரும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் கால் இறுதி போட்டிகள் இந்திய நேரப்படி நாளை அதிகாலை நடக்கிறது. நாளை அதிகாலை 2.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பெரு-பராகுவே அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் பெரு பி பிரிவில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என 7 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்தது. பராகுவே ஏ பிரிவில் 2 வெற்றி, 2 தோல்வி என 3வது இடத்தை பிடித்தது.

இரு அணிகளும் இதுவரை 53 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 23ல் பெரு, 16ல் பராகுவே வென்றுள்ளன. 14 போட்டி சமனில் முடிந்துள்ளது. நாளை அதிகாலை 5.30 மணிக்கு ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கும் மற்றொரு கால்இறுதியில் பிரேசில்-சிலி அணிகள் மோதுகின்றன. வலுவான பிரேசில் லீக் சுற்றில் பி பிரிவில் 3ல் வெற்றி, ஒரு டிரா என முதல் இடத்தையும், சிலி ஏ பிரிவில் ஒரு வெற்றி, 2 டிரா ஒரு தோல்வி என 4வது இடத்தையும் பெற்றன.

இரு அணிகளும் இதுவரை 72 போட்டிகளில் மோதியதில் பிரேசில் 51, சிலி 13ல் வென்றுள்ளன. 8 போட்டி சமனில் முடிந்துள்ளது. கடைசியாக 2017ல் மோதிய போட்டியில் பிரேசில் 3-0 என வென்றுள்ளது.

Related Stories: