நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!: தென்னாப்பிரிக்‍க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதங்கள் சிறை..!!

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்‍க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்‍காவில் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை அதிபராக இருந்த ஜேக்கப் ஜூமா, தனது 9 ஆண்டுகால பதவி காலத்தில் ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் போன்ற பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்த போதிலும் ஆளும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் நெருக்கடியால் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேக்கப் ஜூமா அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தென்னாப்பிரிக்‍காவின் உச்சநீதிமன்றம் ஜேக்கப் ஜூமா மீதான ஊழல் வழக்குகளை பல மாதங்களாக விசாரித்து வருகிறது.  விசாரணை குழு முன், 2019ல் ஒரு முறை மட்டுமே ஜேக்கப் ஜூமா ஆஜரானார். கடந்தாண்டு இறுதியில் நடந்த விசாரணைக்கு வந்த ஜேக்கப், நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பாதியிலேயே எழுந்து சென்றார். இந்த சூழலில் ஊழல் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி ஜேக்கப் ஜூமாவுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தென்னாப்பிரிக்‍க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Related Stories: