புதுக்கோட்டை: கொரோனா சிகிச்சை முடிந்தவர்களுக்கு மறுவாழ்வு மையம் திறக்கப்படும் என தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் நேற்று அளித்த பேட்டி: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களுக்கு தொடர் கண்காணிப்பு செய்யும் வகையில் கண்காணிப்பு மறுவாழ்வு சிகிச்சை மையம் தொடங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தேன். தமிழக அரசு, அந்த கோரிக்கையை ஏற்று மறுவாழ்வு மையம் திறக்கப்படும் என சட்டமன்றத்தில் கூறியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இது நல்ல விஷயமாக பார்க்கிறேன்.