2 ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்-வருவாய்த்துறையினர் அதிரடி

வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த  2  கடைகளை வருவாய்த்துறையினர் அதிரடியாக அகற்றினர்.வாணியம்பாடி அருகே அலசந்தாபுரம்  அடுத்த வெங்கடராஜபுரம்  பகுதியில் சாலையோரம் ஆக்கிரமித்து கார்த்திக் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் கடைகளை வைத்திருந்தனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் வாணியம்பாடி தாசில்தாருக்கும், திம்மாம்பேட்டை போலீசிலும் புகார் மனுக்களை அளித்தனர், இருப்பினும் தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் நிரந்தர கடைகளை கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.  இதனையடுத்து, ஊர் மக்கள் ஒன்று திரண்டு வாணியம்பாடி தாசில்தார் மோகனிடம்  புகார் அளித்தனர்,  அதன்பேரில் விசாரணை நடத்திய தாசில்தார், உடனடியாக அம்பலூர்  வருவாய் ஆய்வாளர் சித்ரா தலைமையில் வருவாய் துறையினரை சம்பவ இடத்திற்கு சென்று  ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தை அப்புறப்படுத்திட நேற்று உத்தரவிட்டார்.  

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர்.  மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டி கடையும் பறிமுதல் செய்து வாணியம்பாடி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக திம்மாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: