கொள்ளிடம் அருகே கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு-மக்கள் மகிழ்ச்சி

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே தினகரன் செய்தி எதிரொலியாக கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள நீரேற்றும் நிலையத்திலிருந்து கொள்ளிடம் பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வந்துகொண்டிருக்கும் பிரதான குடிநீர்குழாய் பூங்குடி கிராமத்தில் உடைப்பு ஏற்பட்டதில் குடிநீர் வீணாகி வெளியேறிக்கொண்டிருந்தது. இதனால் மாதிரவேளூர்,பூங்குடி,படுகை, பட்டியமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் போதிய அளவுக்கு சென்று சேரவில்லை.

இதனால் மேற்கண்ட கிராம பகுதிகளுக்கு போதிய குடிநீர் கிடைப்பதில் சிரமம் இருந்து வந்தது. இந்நிலையில் இதுகுறித்த செய்தி தினகரனில் படத்துடன் வௌியிடப்பட்டிருந்தது. இதையடுத்து இதனை அறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பவ இடத்திற்கு சென்று உடைந்த குடிநீர் குழாயை நேற்று சீரமைத்தனர்.தொடர்ந்து தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.இதுகுறித்து கிராம பொது மக்களின் சார்பில் விவசாய சங்க பொருளாளர் கலையரசன் கூறுகையில் உரிய நேரத்தில் செய்தி வெளியிட்டு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுத்த தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தார்.

Related Stories: