சென்னை: அதிமுக புதுவெள்ளத்தில் மிதந்துவரும் நுரை பூ அல்ல ஊதி விளையாட, தொண்டர்களின் வீரத்திலும், தியாகத்திலும் விளைந்திட்ட நெருப்பில் பூத்த மலர் என்று இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பழிவாங்கும் நோக்கத்தோடு அதிமுகவினர் மீதும், தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீதும், பொய் வழக்கு போடுவதும், தாக்குதல் நடத்துவதுமான செயல்களை நிறுத்த வேண்டும்.
பாதிக்கப்படக்கூடிய தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகளோடும், கழக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளோடும் கலந்துபேசி அவர்களுக்கு தகவல் தெரியப்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் எதிர்த்து களமாடுவதற்கு கழக வழக்கறிஞர் பிரிவு தயார் நிலையில் இருக்கிறது. அதை, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்தவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதிமுக புதுவெள்ளத்தில் மிதந்துவரும் நுரை பூ அல்ல ஊதி விளையாட, தொண்டர்களின் வீரத்திலும், தியாகத்திலும் விளைந்திட்ட நெருப்பில் பூத்த மலர். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.