பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக திருநீர்மலை கோயிலில் ரோப் கார் வசதி: அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு

சென்னை: திருநீர்மலை பெருமாள் கோயிலில் ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பக்தர்களின் வசதிக்காக கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவும், கோயில் குளம் சீரமைக்கவும், காலி பணியிடங்களை நிரப்பவும் அமைச்சர் சேகர்பாபு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 108 திவ்ய திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தீர்நீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இக்கோயிலில் 288 படிக்கட்டுகள் உள்ளதால் நடக்க இயலாதவர்கள், முதியவர்கள் சாமியை தரிசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, இக்கோயிலில் ரோப் கார் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதை தொடர்ந்து, ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் புனரமைப்பு குறித்து முதல்வர் உத்தரவுப்படியும், பக்தர்களின் நீண்ட கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மலை கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக படிக்கட்டுகளில் நிழல் மண்டபங்கள் உபயதாரர்கள் மூலம் புதிதாக கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறும், அர்ச்சகர்கள் குடியிருப்பு மிகவும் பழுதடைந்துள்ளதால் அவற்றை மராமத்து செய்து புதுப்பிக்கலாமா அல்லது நவீன வசதிகளுடன் புதிய குடியிருப்புகள் கட்டலாமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து, இதற்காக உரிய மதிப்பீடு தயார் செய்து விரைவாக பணிகளை மேற்கொள்ள ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பக்தர்களின் வசதிக்காக கழிப்பிட வசதி, கோயில் குளம் சீரமைத்தல், தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்யவும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கவேனிதா, செயல் அலுவலர் சக்தி மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: