லோக் ஜனசக்தி கட்சி தேசிய தலைவராக பசுபதி குமார் பாரஸ் ஒருமனதாக தேர்வு

பாட்னா:  பீகாரில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் நிறுவிய லோக் ஜனசக்தி கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பஸ்வானின் மகனும்,  கட்சியை தலைமை ஏற்று நடத்தியவருமான சிராக் பஸ்வானுக்கு பக்கபலமாக இருந்த ராம்விலாஸ் பாஸ்வானின் தம்பியும், ஹாஜிபூர் எம்பி.யுமான பசுபதி நாத் பராஸ் திடீரென 5 எம்பி.க்களுடன் தனி அணியாக பிரிந்தார். இதையடுத்து, பராசின் கட்சியை கைப்பற்றும் முயற்சியை முறியடிக்க, அதிருப்தி எம்பி.க்கள் 5 பேரையும் கட்சியில் இருந்து சிராக் பஸ்வான் நீக்கினார்.

இந்நிலையில், பசுபதி குமார் பாரஸ், நேற்று லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய தலைவராகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதற்கான வேட்புமனுவை அவர் நேற்று தாக்கல் செய்தபோது, அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து, முதல்வர் நிதிஷ் குமாரை அவர் சந்திக்க உள்ளார். லோக் ஜனசக்தி கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு நிதிஷ் குமார்தான் காரணம் என சிராக் பஸ்வான் குற்றம்சாட்டி வரும் நிலையில், அவரை பாரஸ் சந்திப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோக் ஜனசக்தியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து சிராக் பஸ்வான் நீக்கப்பட்டதாக, இரு தினங்களுக்கு முன் பாரஸ் பிரிவு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

* சித்தப்பு... என்னை இப்படி அனாதையாக்கிட்டேயே...

கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவால் சிராக் பஸ்வான் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் அளி்தத பேட்டியில், ‘நான் ஒரு சிங்கக் குட்டி. போராட்டத்துக்கு தயாராகி விட்டேன். எனது தந்தை இழந்தபோது கூட நான் யாரும் இல்லாதவனாக உணரவில்லை. ஆனால், எனது சித்தப்பா என்னை விட்டு போனதால் அனாதையாகி விட்டேன்,” என்றார் உருக்கமாக.

Related Stories: