திருமங்கலம்: அதிமுக ஆட்சியில் பராமரிப்பு பணி நடைபெறாததால் கள்ளிக்குடி அருகே அரசபட்டி பஞ்சாயத்து அலுவலகம் சிதைவடைந்து மழைக்கு ஒழுகி வருகிறது. இதனால் பணிகள் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்திற்குட்பட்டது டி.அரசபட்டி கிராமம். இந்த கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சரிவர பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யாததால் தற்போது பஞ்சாயத்து அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் காரை பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழைக்காலங்களில் அலுவலகத்தின் பெரும்பாலான பகுதியில் ஒழுகுவதால் ஆவணங்களை பராமரிப்பதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. பஞ்சாயத்து கூட்டங்கள் நடத்த கூட அலுவலத்தில் சரிவர இடம் இல்லாமல் பஞ்சாயத்து நிர்வாகம் திணறி வருகிறது.