தூத்துக்குடியில் ரேசன் அரிசி கடத்தல்: 70 மூடைகள் பறிமுதல்; 4 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3500 கிலோ எடையுள்ள 70 மூடைகள், ஆம்னி வேன், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரேசன் அரிசி கடத்துவதாக தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில், தென்பாகம் எஸ்ஐ. வேல்ராஜ் தலைமையில் ஏட்டுகள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், மகாலிங்கம், செந்தில், திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தூத்துக்குடியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சாலையில் வேகமாக வந்த ஆம்னி வேன் மற்றும் டாட்டா சுமோவை மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர். இதில் அந்த வாகனங்களிலிருந்த தூத்துக்குடி அண்ணாநகர் 9வது தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் சிவப்பிரகாஷ் (27), டூவிபுரத்தைச் சேர்ந்த பாலு மகன் அருண் குமார் (25), ராஜகோபால் நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மணிகண்டன் (26) மற்றும் வி.எம்.எஸ். நகரைச் சேர்ந்த குமார் மகன் கார்த்திக் ஆகியோர் 50 கிலோ எடையுள்ள 70 மூட்டைகளில் 3 ½ டன் ரேசன் அரிசியை கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் மேற்படி 4 பேரையும் கைது செய்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி அண்ணாநகரில் உள்ள ஜீவா மாவு மில் உரிமையாளர் ஆறுமுகச்சாமி என்பவரிடம் வேலை செய்து வருவதாகவும், அங்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். அவர்கள் 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து  70 மூடை அரிசி, கடத்துவதற்கு பயன்படுத்திய ஒரு ஆம்னி வேன் மற்றும் டாட்டா சுமோ கார் ஆகியவற்றையும் தூத்துக்குடி உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: