கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக பாலிவுட் நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் (98), கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக நேற்று முன்தினம் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அவரது மனைவியும், பாலிவுட் நடிகையுமான சாய்ரா பானு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘திலீப் குமாருக்கு நள்ளிரவில் திடீரென்று  மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனக்கும், அவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், வீட்டில் எங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த சில மாதங்களாக யாரையும் நாங்கள் சந்திக்கவில்லை. அதனால் எங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. அதனால்தான் திலீப் குமாரை கொரோனா சிகிச்சை அளிக்காத மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். மூச்சுத்திணறலுக்கான காரணம் என்னவென்று கண்டறிய டாக்டர்கள் பல்வேறு சோதனைகள் நடத்தி வருகின்றனர்’ என்றார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா முதல் அலையில், திலீப் குமாரின் சகோதரர்கள் அஸ்லாம் கான் (88), இஷான் கான் (90) ஆகியோர் பலியானார்கள். அந்த சோகம் திலீப் குமாரின் மனநிலையை மிகவும் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திலீப் குமார், பூரண நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Related Stories: