தோஹா: இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் பிபா உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டம், கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று இரவு 7.30க்கு தொடங்கி நடைபெறுகிறது. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டு கத்தாரில் நடைபெற உள்ளது. அதற்காக ஆசிய அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் 2019ல் தொடங்கின. ஈ பிரிவில் இந்தியா, கத்தார், ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கேதசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 ஆட்டங்களில் மோதி வருகின்றன. கொரோனா பீதி காரணமாக கடந்த ஆண்டு எந்த ஆட்டமும் நடைபெறவில்லை. இங்கு பரவல் அதிகமாக இருப்பதால் இந்தியாவில் நடைபெற வேண்டிய 2 ஆட்டங்கள் உட்பட இந்தியா ஆட வேண்டிய எஞ்சிய 3 ஆட்டங்களும் கத்தாரின் தோஹாவில் நடக்கிறது.