17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ‘போக்சோ’ சட்டத்தில் பாலிவுட் நடிகர் கைது: மும்பை போலீசார் நடவடிக்கை

மும்பை: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் பாலிவுட் நடிகர் பேர்ல் வி பூரி என்பவரை போக்சோ சட்டத்தில் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் பேர்ல் வி பூரி என்பவர், மைனர் சிறுமி ஒருவரை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ‘மீடூ’ ஹேஷ்டாக்கில் புகார் எழுந்தது. அதையடுத்து, மும்பை போலீசார் ‘மீடூ’ புகார் தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தியதில், சிறுமியை பேர்ல் வி பூரி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து பேர்ல் வி பூரி மீது ஐபிசி பிரிவு 376 ஏபி, ஆர் / டபிள்யூ ‘போக்சோ’  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

உள்ளூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதற்கிடையில், பாலியல் வழக்கில் பேர்ல் வி பூரி கைது செய்யப்பட்டதற்கு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேர்ல் வி பூரியின் முன்னாள் காதலியும், நடிகையுமான கரிஷ்மா தன்னா, ‘பேர்ல் வி பூரி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஆதாரமில்லை’ என்று தெரிவித்துள்ளார். கரிஷ்மா தன்னாவும், பேர்ல் வி பூரியும் கடந்த சில ஆண்டாக காதலித்து வந்தனர். பின்னர்  அவர்களுக்குள் பிளவு ஏற்பட்டது. அதனால், இருவரும் தங்கள் காதல் உறவை முறித்துக் கொண்டனர். இருப்பினும், இருவருக்கும் இடையே நட்பு இன்னும் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி சஞ்சய் பாட்டீல் கூறுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட பேர்ல் வி பூரி, கடந்த 2013ம் ஆண்டில் ‘தில் கி நாசர் சே கூப்சுரத்’ மூலம்  அறிமுகமானார். இவர், சிறுமி ஒருவரை  தனது ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால், அவருடன் சேர்த்து 5 பேரை கைது செய்துள்ளோம். இந்த சம்பவம் பழையதாக இருந்தாலும் கூட, பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தனது தாயுடன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளார்.   அதில், டிவி தொடர்களில் நடிக்கவைப்பதாக கூறி சிறுமியை  நடிகர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: