உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஏலகிரி மலையில் 30 ஆயிரம் விதைகள் 7,559 மரக்கன்றுகள், 1000 விதைப்பந்துகள் நடும் விழா: கலெக்டர், எம்எல்ஏ துவக்கி வைத்தனர்

ஜோலார்பேட்டை: ஏலகிரி மலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கலெக்டர், எம்எல்ஏ ஆகியோர் 30,000ஆயிரம் விதைகள், 2,500 மரக்கன்றுகள், ஆயிரம் விதைப்பந்துகளை நேற்று நட்டு துவக்கி வைத்தனர். ஜோலார்பேட்டை அடுத்த சுற்றுலாத் தலமான ஏலகிரி மலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள், விதைப்பந்துகள், விதைகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் சிவன் அருள் தலைமை தாங்கினார். பிடிஓக்கள் பிரேம்குமார், சங்கர் வரவேற்றனர். திட்ட அலுவலர் மகேஷ் பாபு முன்னிலை வகித்தார்.

இதில் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ க. தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அத்தனாவூர் அரசினர் பழத் தோட்டத்தில் குறுங்காடுகள் வளர்த்தல் முறையில் 30 ஆயிரம் விதைகளை தூவி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதனையடுத்து அத்தனாவூர் பகுதியில் உள்ள கரிகொட்டை என்ற இடத்தில் 2,500 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியும், 1000 விதைப்பந்துகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கலெக்டர் சிவன் அருள், எம்எல்ஏ தேவராஜி,  திட்ட இயக்குனர் மகேஷ் பாபு, திட்ட அலுவலர் உமா மகேஸ்வரி  உட்பட அரசு துறை அதிகாரிகளும், தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மரக்கன்றுகளும் விதைகளும் நடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியின்போது கலெக்டர், எம்எல்ஏ, சமூக ஆர்வலர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஏலகிரி மலையில் பல்வேறு பகுதிகளிலும், அரசுக்கு சொந்தமான இடத்திலும் மரக்கன்றுகள் நட்டும், விதைகளை தூவினர்.

மேலும் மரக்கன்றுகள் பழவகைகள் நிறைந்தவைகளாக இருந்தால் அதில் விளையும் பழங்களை பறவைகள் தின்று பல்வேறு பகுதிக்கு செல்லும்போது அதன் எச்சம் மூலம் மற்ற பகுதிகளில் செடி வகைகள் மீண்டும் உற்பத்தியாக வழி வகை பிறக்கும் என தெரிவித்தனர். இதில் உதவி பொறியாளர் கார்த்திகேயன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், ஊராட்சி செயலாளர் சண்முகம், உட்பட அரசுத்துறை அதிகாரிகளும், தன்னார்வத் தொண்டர்களும், தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாட்றம்பள்ளி:  நாட்றம்பள்ளி தாலுகாவுக்குட்பட்ட பகுதியில் 5,059 மரக்கன்று நடும்பணியை கலெக்டர் நேற்று தொடங்கி வைத்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா அம்மணாங்கோயில் ஊராட்சிக்கு உட்பட்ட பனந்தோப்பு பகுதியில் நேற்று 5,059 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. இதில் கலெக்டர் சிவன் அருள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி தாசில்தார் சுமதி, இயற்கை மீட்பு குழுவினர், இளைஞர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் நடிகர் விவேக் ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட புதூர் பகுதியில் குறுங்காடு வளர்ப்பு முறையில் மரக்கன்றுகள், விதைப்பந்துகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் நகராட்சி ஆணையாளர் சி.ராமஜெயம் தலைமை தாங்கினார். கலெக்டர் சிவன் அருள் கலந்துகொண்டு குறுங்காடு வளர்ப்பு முறையில் மரக்கன்றுகள் மற்றும் விதைப்பந்துகள் நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்.  இதில் தனியார் தொண்டு நிறுவனரும், சமூக ஆர்வலருமான புகழேந்தி மற்றும் உறுப்பினர்கள் ஆங்காங்கே மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவதை பாராட்டினர். இதில் சுகாதார ஆய்வாளர் உமா சங்கர், பணி மேற்பார்வையாளர் கார்த்திகேயன், துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ், நகராட்சி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: