கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று, மம்தா பானர்ஜி தொடர்ந்து 3வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி நேற்று கூடியது. இதில், கட்சியில் ஒரே நேரத்தில் ஒருவர் ஒரு பதவி மட்டுமே வகிக்க வேண்டுமென்ற புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி, கட்சியின் தேசிய பொதுச் செயலாளரான சுப்ரதா பக்ஷிக்கு பதிலாக தனது மருமகன் அபிஷேக் பானர்ஜியை நியமிக்க மம்தா பரிந்துரைத்தார்.