கட்சியில் இருந்து நீக்க நான் காரணமல்ல நீலோபர் கபிலுக்கு நல்ல பெயர் இல்லை என்றே அதிமுக தலைமையிடம் சொன்னேன்: முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி பேட்டி

திருப்பத்தூர்: முன்னாள் அமைச்சர் நீலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட நான் காரணமல்ல. அவருக்கு மக்களிடத்தில் நல்ல பெயர் இல்லை என்றுதான் தலைமையிடம் சொன்னேன் என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.திருப்பத்தூரில் தனியார் சொகுசு விடுதியில் அதிமுக  மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி நேற்று அளித்த பேட்டி:முன்னாள் அமைச்சர் நீலோபர் கபில்  கடந்த தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதற்கு முழு காரணம் கே.சி.வீரமணி தான் என பகிரங்க குற்றச்சாட்டை என் மீது வைத்து வருகிறார். அது முற்றிலும் தவறானது.நீலோபர் கபில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு அளிக்கவில்லை என்றபோது, அவர் கட்சிக்கு எதிராக செயல்படுகிறார்.

அது மட்டுமின்றி நடந்து முடிந்த தேர்தலில் நீலோபர் கபில் பொறுப்பாளராக செயல்பட்ட வாணியம்பாடி நகர் பகுதி வார்டு பூத்துகளில் 2ஓட்டு, 12ஓட்டு, 16 ஓட்டு, 31 ஓட்டு என குறைந்த வாக்குகளை மட்டுமே அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் பெற்றுள்ளார். இந்த செயல்பாடு ஒன்றே அவரை கட்சியில் இருந்து நீக்க போதுமானது. அதுமட்டுமன்றி வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்படும் பணத்தை கிராமப்புறங்களில் செலவழிக்காமல் நகர் பகுதிகளில் மட்டுமே செலவழித்து வந்தார். அமைச்சர் பதவியிலேயே இவர் முக்கிய குறிக்கோளாக இருந்தார். மக்கள் நலனை பார்க்காமல் செயல்பட்டதால், அவருடைய சொந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பையும் இழந்தார். அதிமுக தலைமை முடிவு செய்ததின் பெயரிலேயே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாரே தவிர என்னுடைய உந்துதல் எதுவும் இல்லை.

இந்த முறை கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார் நீலோபர் கபில். அதன்பிறகு என்னை தலைமை விசாரித்தது. நான் அவருக்கு நல்ல பெயர் மக்களிடத்திலும் இல்லை. கட்சியினர் மத்தியிலும் இல்லை என தெரிவித்தேன்.

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீலோபர் கபிலை கட்சியில் சேர்க்கும் போது உனக்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா என கேட்டார். நீலோபர் கபிலுடைய செயல்பாடுகள் அனைத்தும் சிறந்த முறையில் இருக்கும் என முன்னர் எடுத்துக் கூறி காட்சியில் நான் தான் சேர்த்துவிட்டேன். ஆனால் அதன்பிறகு நீலோபர் கபிலுக்கு  நான் பரிந்துரை செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: