கரூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் இணைந்து ஆக்சிஜன் வசதி கொண்டகொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் இணைந்து அமைத்துள்ள ஆக்சிஜன் வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூரில் உள்ள டிஎன்பிஎல் டவுன்சிப்-ல் உள்ள சமுதாய கூடத்தில், 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை  அமைத்துள்ளது. அவற்றில் 152 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகள் கொண்டவை.இந்த சிகிச்சை மையத்திற்கு தேவையான மின்சார வசதி, குடிநீர் வசதி, மருத்துவ பணியாளர்களுக்கான அறைகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை தவிர, ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி மருத்துவமனைக்கு கிடைத்திட, சுமார் ரூ.1 கோடி செலவில், தேவையான உபகரணங்கள்  இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், அருகில் உள்ள கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கும் தேவையான ஆக்சிஜனை சிலிண்டர்களில் இங்கு நிரப்பி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சியில், கரூரில் இருந்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.இளங்கோ, இரா.மாணிக்கம், சிவகாம சுந்தரி, கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் பிரசாந்த் வடநேரே, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் செயல் இயக்குநர் எஸ்.வி.ஆர்.கிருஷ்ணன் ஆகியோரும், தலைமை செயலகத்தில் இருந்து தலைமை செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜீவ் ரஞ்சன், தொழில் துறை சிறப்பு செயலாளர் அருண் ராய் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: