கொரோனா தொற்று ஊரடங்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்

திருவையாறு : கொரோனா தடுப்பு ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக கடைபிடித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.திருவையாறு அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் வசதிகள், படுக்கை வசதிகள், நோயாளிகள் விவரங்களை கேட்டறிந்தார்.

அதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சர் என்ற முறையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்துள்ளேன். திருவையாறு அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தேன். இந்த மருத்துவமனையில் என்னவகையான தட்டுப்பாடுகள் உள்ளன என்பன குறித்து ஆலோசித்து, எவற்றிற்கெல்லாம் முன்னுரிமை கொடுக்கவேண்டும், எதையெல்லாம் கொண்டு வரவேண்டும், என்ற கருத்துக்களை தமிழக முதலைமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை மக்கள் பீதி அடைய வேண்டாம், அச்சப்பட வேண்டாம். ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 30 ஆயிரம் கொரோனா தடுப்பூசி ஊசிகள் கொண்டு வரப்பட்டு அவை பிரித்து கொடுத்து வழங்கப்படுகிறது.

தாலுகா தலைமை மருத்துவமனைகளில் வென்டிலேட்டர், ஆக்சிஜன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான் இன்று (நேற்று) 18 வயது முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக கடைபிடித்து ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி கூறினார்.இதைதொடர்ந்து ஒரத்தநாடு, பூதலூர் அரசு மருத்துமனைகளில் அமைச்சர் ஆய்வு  செய்தார்.

Related Stories: