மேற்கு வங்க வன்முறை!: சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு உச்சநீதிமன்றத்துக்கு 2000க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் கடிதம்..!!

டெல்லி: மேற்கு வங்க வன்முறை தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 2000க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.  மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாயின. அதில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் வன்முறை வெறியாட்டம் நடந்தது. ஏராளமான வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்திருப்பதாக மேற்கு வங்க அரசு தெரிவித்திருக்கிறது. 

ஆனால் வன்முறை சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்திருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது. வன்முறை தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் மத்திய குழு ஆய்வு செய்தது. இந்நிலையில் மேற்கு வங்க வன்முறை தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 2000க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.  இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, என்.வி.ரமணாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை அரசியல் சாசனத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் உடனடியாக இந்த வன்முறை குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: