புதுடெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 10 கோடி டோஸ் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளே பயன்பாட்டில் உள்ளன. மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. இந்த தடுப்பூசி கடந்த 14ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. இதன் விநியோக உரிமையை பெற்றுள்ள ஐதராபாத்தின் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் 2 தவணையாக ஸ்புட்னிக் தடுப்பூசியை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.