கொல்கத்தா: நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி வெற்றி மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார். கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தபோதிலும், மம்தா போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார். எனவே, அவர் முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டுமானால், 6 மாத காலத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில், பவானிபூர் தொகுதி எம்எல்ஏவும், வேளாண் அமைச்சருமான கட்சியின் மூத்த தலைவர் சோபன்தேப் சட்டோபாத்யாய் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை சபாநாயகர் பீமன் பானர்ஜி ஏற்றுக்கொண்டுள்ளார். இதையடுத்து பவானிபூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அங்கு மம்தா போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.