சென்னை: புதிய கல்வி கொள்கை குறித்த மத்திய கல்வி அமைச்சரின் காணொலி கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்திருப்பது வரவேற்க்கத்தக்கது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா நோய்த் தொற்று பரவலின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் சூழலில் ஒன்றிய அரசு புதியக் கல்விக் கொள்கையை செயல்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறது. இதற்காக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் மாநில கல்வித்துறை அதிகாரிகளின் காணொலிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இந்த கூட்டத்தில் கொரோனா நெருக்கடி காலத்தில் பள்ளிகளை இயக்குவது புதிய கல்விக் கொள்கையை அமலாக்குவது போன்ற முக்கியமான கொள்கை சார்ந்த பிரச்னைகள் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.