சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 30வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மே 21ம் தேதி கொரோனா விதிகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். கூட்டம் கூடி அஞ்சலி செலுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நினைவு நாளை எப்படி கடைபிடிப்பது என்பது குறித்து விவாதிப்பதற்காக எனது தலைமையில் காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்று கருத்துக்களை கூறினார்கள்.