அரபிக்கடலில் டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்யும்

சென்னை: அரபிக் கடலில் நிலை ெகாண்டு இருந்த டவ்-தே புயல் மேலும் வலுப்பெற்று தீவிரப்புயலாக மாறியுள்ளது. இன்று மாலை 6 மணி அளவில் இந்த புயல் குஜராத்தை நெருங்கும். நள்ளிரவில் கரையைக் கடக்கும் என்று  கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் இரவு புயலாக மாறியது (டவ்-தே). அந்த புயல் நேற்று மேலும் வலுப்பெற்று தீவிரப் புயலாக மாறியுள்ளது.  இந்நிலையில் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மாலை 6 மணிக்கு அந்த புயல் குஜராத்தை நெருங்கும். இரவு 10க்கு மேல் நள்ளிரவில் இந்த குஜராத்தின் ஊடாக  கரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் கரையைக் கடக்கும் போது தரைப்பகுதியில் உள்ள ஈரப்பதம் உள்ள காற்றை உறிஞ்சத் தொடங்கும் என்பதால் தரைப் பகுதியில் வறண்ட வானிலை நிலவும். ஆனால் சில இடங்களில் லேசானது  முதல் மிதமான மழை பெய்யும். குறிப்பாக தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை  பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில்  லேசான மழையும் பெய்யும், என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: