பொதுமக்களுக்கு பயந்து கல்லாய் மாறிபோன மனம்: கொரோனாவுக்கு பலியான மகளின் சடலத்தை வாங்க மறுத்த தந்தை

சேலம்: அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு வரும் என்பதால் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு பலியான மகளின் சடலத்தை, தந்தை வாங்க மறுத்துவிட்டார். சேலம் தாரமங்கலம் அடுத்த பவளத்தானுர் பகுதியில் அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் வசித்த 33 வயதுள்ள பெண்ணுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கொரோனா தொற்று உறுதியானதால் சேலம்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், நேற்று முன்தினம் இரவு அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் அவரது உடலை வாங்கிச் செல்ல தந்தை மறுத்துவிட்டார்.

கொரோனா தொற்றால் தனது மகள் உயிரிழந்ததால், உடலை தாரமங்கலம் பகுதியில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். எனவே உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய முடியாது. இதனால் உடலை வாங்க மாட்டேன்  என்று கூறி, தந்தை மறுத்து விட்டார்.

 மேலும் நீங்களே அடக்கம் செய்து விடுங்கள் என்று போலீசாரிடம் கோரிக்கை வைத்தார். இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து  பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்களிடம் உடலை அடக்கம் செய்வதால் எந்த பாதிப்பும் வராது. எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள் என்று மருத்துவர்கள் விளக்கினர். இதையடுத்து நேற்று காலை சடலத்தை பெற்றுக் கொண்டு, சேலத்தில்  உள்ள மயானத்தில் தகனம் செய்தனர். பொதுமக்களுக்கு பயந்து பெற்ற மனம் கல்லாய் மாறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: