61 எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்த எடப்பாடியார்.. தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரானார்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 65 தொகுதிகளை கைப்பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர இருக்கிறது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து முடிவு செய்ய அதிமுக எம்எல்ஏ கூட்டம் கடந்த 7ம் தேதி அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர்செல்வமும் தங்களுக்குத்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்று பிடிவாதமாக இருந்துள்ளனர். இதையடுத்து கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் மீண்டும் ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் விடாப்பிடியாக இருந்து வருகின்றனர்.

இதனால் ஆத்திரத்தில் முன்னாள் சபாநாயகர் தனபால் பெயரை முன்மொழிந்தார் ஓபிஎஸ். ஆனால் எம்எல்ஏக்களின் பெரும்பாலோனோரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி தான் இருந்துள்ளது.ஏழாம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கட்சியில் நான் இணை ஒருங்கிணைப்பாளர் ஆக இருந்தாலும் தேர்தலில் செலவு செய்தது நான் தான். 234 தொகுதிகளிலும் சுற்றி வந்து பிரச்சாரம் செய்ததும் நான்தான். அதனால் எனக்குத்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டும் என்று வாதிட்டுள்ளார்.

இந்த காரணத்தாலேயே எடப்பாடி பழனிசாமிக்கு கிட்டத்தட்ட 61 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர். மேலும் ஓ.பன்னீர்செல்வத்திடம் கட்சி நல்ல வழியில் நடக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று சமாதானம் பேசினர். ஒருவழியாக ஓபிஎஸ் சம்மதம் தெரிவித்ததால், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories: