கண்ணமங்கலம்: திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் இந்தியா- சீனா எல்லையில் பனிச்சரிவில் சிக்கி மரணமடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(33). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்த இவர் `கோர் ஆப் சிக்னல்ஸ்’ என்ற தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஒயர்லெஸ் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், இந்தியா- சீனா எல்லையான கேங்டாக் சிக்கிம் பகுதியில் ராணுவ வீரர் பிரகாஷ் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பனிப்பிரதேசம் என்பதால் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், இன்று (திங்கள்) விமானம் மூலம் அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.