‘அஞ்சானத்திரி மலையில் அனுமன் பிறந்தார்’ திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்புக்கு கிஷ்கிந்தா தேவஸ்தானம் எதிர்ப்பு: கர்நாடகாவில் அனுமன் பிறந்ததாக தகவல்

திருமலை,: அஞ்சனாத்திரி மலையில் அனுமன் பிறந்ததாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிஷ்கிந்தா தேவஸ்தானம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. ராமர் பக்தனான அனுமன் பிறப்பிடம் குறித்து பல புராணங்களில் பல்வேறு விதமாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட பல புராணங்களில், அனுமன் பிறப்பிடம் திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்திரி என கூறப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக வைத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் பண்டிதர்கள் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தியது. ஆய்வின் முடிவில் அனுமன் பிறப்பிடம் சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்திரி மலை தான் என்பது முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஸ்ரீராமநவமி அன்று திருமலையில் அதிகாரப்பூர்வமாக தமிழக கவர்னர் பன்வரிலால் புரோகித் முன்னிலையில் அஞ்சனாத்திரி மலையில் அனுமன் பிறந்ததாக ஆதாரங்களுடன் வெளியிட்டது.

இதனை எதிர்த்து, கர்நாடகா மாநிலம், அம்பியில் உள்ள கிஷ்கிந்தா தேவஸ்தானம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, 6 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: வரலாற்று ஆய்வாளர்கள் நடத்திய ஆராய்ச்சிகளின் முடிவில், அம்பியில் உள்ள கிஷ்கிந்தையில் தான் அனுமன் பிறந்தார் என உறுதியாகி உள்ளது. இந்நிலையில், திருமலை தேவஸ்தானம் எந்த வரலாற்று ஆய்வாளர்களை வைத்து ஆராய்ந்து இதுபோன்ற ஒரு முடிவிற்கு வந்து, திடீரென அஞ்சனாத்திரி மலை தொடரில் அனுமன் பிறந்தார் என்று அறிக்கை சமர்பித்துள்ளது? இதற்கு ஆய்வாளர்களின் கூற்றுப்படி விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த  பிறகு இதுகுறித்து நேருக்கு நேர் யார் வந்தாலும் அவர்களுடன் விவாதம் செய்து அனுமன் திருமலையில் உள்ள அஞ்சனாத்திரி மலையில் தான் பிறந்தார் என்ற  விவாத மேடை வைத்துக் கொள்ளலாம். தங்களிடம் உரிய ஆதாரங்கள் உள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கிஷ்கிந்தா தேவஸ்தானத்திற்கு பதில் அளித்துள்ளது.

Related Stories: