வனப்பகுதியில் பெய்த கனமழை!: கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணை ஒரே இரவில் நிரம்பியது..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை வனப்பகுதிகளில் பெய்த கனமழையால் ஒரே இரவில் நிரம்பியது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குன்றி, விளாங்கோம்பை, கம்பனூர், கடம்பூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட காட்டாறுகள் குண்டேரிப்பள்ளம் அணைக்கு வருகிறது. இந்த அணை 42 அடி உயரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் வினோபா நகரில் கட்டப்பட்டது. 

இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் வினோபா நகர், ரோன்கர் பாளையம் உள்ளிட்ட 10த்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் 2,500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழையின்றி வறண்டு கிடந்த அணை, தற்போது ஒரே இரவில் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் கடந்த 1980ல் அணை கட்டப்பட்ட பின்னர் இன்று வரை 40 ஆண்டுகளாக அணை தூர்வாரப்படவில்லை என்றும் அதனால் அணையில் 10 அடி உயரத்திற்கு சேறும், சகதியுமாக படிந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து அணையை தூர்வாருவதற்கு பதில் அதிகாரிகள் 1.89 கோடி ரூபாய் செலவில் சுற்றுலாத் தளமாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: