ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பால் பிசிசிஐக்கு ரூ.2000 கோடி இழப்பு?

மும்பை: 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்கி மும்பை, தற்போது அகமதாபாத், புதுடெல்லி ஆகிய நகரங்களில் நடந்து வந்தது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்பட்டு வந்தது. வீரர்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த 24 நாட்களில் 29 லீக் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொல்கத்தாவைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் வேறு வழியின்றி ஐபிஎல் தொடரை பிசிசிஐ நிர்வாகம் ஒத்திவைக்க முடிவெடித்துள்ளது.

பாதியிலேயே ஐபிஎல் தொடர் ஒத்தி வைப்பால் பிசிசிஐக்கு 2000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேரடி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. 5 ஆண்டு ஒளிபரப்பு உரிமத்தை 16347 கோடிக்கு பெற்றுள்ளது. ஆண்டுக்கு 3269.4 கோடி ரூபாய். ஒரு சீசனில் 60 போட்டிகளும் நடந்தால் ஒரு போட்டிக்கு 54.5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். தற்போது அதில் இழப்பு ஏற்பட்டுள்ளது. 29 போட்டிகள் மூலம் 1580 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள போட்டிகள் நடத்தப்படாமல் போனால் 1690 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். இதே போல டைட்டில் ஸ்பான்சர், பிற ஸ்பான்சர்களாலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. வீரர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: