பழவந்தாங்கலில் மாயமான சென்னை விமான நிலைய ஊழியர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை

  • கட்டைப்பை, சூட்கேசில் கொண்டு வந்து கோவளம் கடற்கரையில் புதைப்பு
  • திருமணம் செய்து பிரிந்த பெண் பாலியல் தொழிலாளி பகீர் வாக்குமூலம்

ஆலந்தூர்: பழவந்தாங்கலில் மாயமான சென்னை விமான நிலைய ஊழியரை துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்து கட்டைபை, சூட்கேசில் கொண்டு வந்து கோவளம் கடற்கரையில் புதைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அவரை திருமணம் செய்து பிரிந்த பாலியல் தொழில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயந்தன் (29). இவர் சென்னை நங்கநல்லூர் என்ஜிஒ சாலையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலைய வெளிநாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயந்தன் கடந்த மார்ச் 18ம் தேதி மதியம் நங்கநல்லூர் சகோதரி வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வேலைக்கு சென்றபிறகு பணி முடிந்ததும் சொந்த ஊரான விழுப்புரத்திற்கு செல்ல போவதாக சகோதரியிடம் கூறிவிட்டு சென்றார்.

ஆனால் சில நாட்கள் கடந்தும் திரும்பி வராததால் அவருடைய சகோதரி, ஜெயந்தனை செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜெயந்தனின் சகோதரி பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜெயந்தனின் செல்போன் நம்பரை ஆய்வு செய்ததில் புதுக்கோட்டை மாவட்டம் செம்மாளம்பட்டி என்ற இடத்தில் சிக்னல் காட்டியது. இதையடுத்து, கடந்த 1ம் தேதி தனிப்படை போலீசார் சென்றபோது, அங்கு பாலியல் தொழில் செய்யும் பாக்கியலட்சுமி (38) என்ற பெண் இருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, ஜெயந்தன் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்தார். இதையடுத்து, அந்த பெண்ணிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘பாலியல் தொழிலில் ஈடுபட்டு இருந்த தன்னை ஜெயந்தன் தாம்பரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் முதலில் சந்தித்தார். அப்போது பழக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக கடந்த 2020ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் கோயிலில் வைத்து தன்னை ஜெயந்தன் திருமணம் செய்து கொண்டார். 2021ம் ஆண்டில் பிரிந்து விட்டேன். கடந்த மாதம் 19ம் தேதி ஜெயந்தன் மீண்டும் என்னை பார்க்க புதுக்கோட்டை வந்த போது தகராறு செய்ததால் கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி கட்டைப்பை மற்றும் சூட்கேசில் அடைத்து 20 மற்றும் 26ம் தேதிகளில் கோவளம் கடற்கரை அருகே குழி தோண்டி புதைத்து விட்டேன்.

இதற்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த சங்கர், கோவளத்தை சேர்ந்த வேல்முருகன் உடந்தையாக இருந்தனர்’ என்று தெரிவித்து உள்ளார். இதையடுத்து, தனிப்படை போலீசார் பாக்கியலட்சுமியை கைது செய்து பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். ஜெயந்தன் உடலை புதைத்த இடத்தினை பாக்கியலட்சுமி அடையாளம் காட்டுவதாக கூறியுள்ளதால் திருப்போரூர் தாசில்தார், செங்கல்பட்டு அரசு மருத்துவர் முன்னிலையில் ஜெயந்தன் புதைக்கப் பட்டதாக கூறப்படும் இடத்தினை தோண்டி எடுக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

The post பழவந்தாங்கலில் மாயமான சென்னை விமான நிலைய ஊழியர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: