சீர்காழி: வைத்தீஸ்வரன் கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் பக்தர்களின்றி நேற்று நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாக கருதப்படும் இந்தக்கோயிலை 500 ஆண்டுகால பழமைவாய்ந்த சைவத்திருமடமான தருமை ஆதீனம் நிர்வகித்து வருகிறது. இங்கு மூலவராக வைத்தியநாத சுவாமியும், தையல்நாயகி அம்மனும் அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தின் குடமுழுக்கு கடைசியாக 1998ம் ஆண்டு நடந்தது. ஆகம விதிகளின்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்ய வேண்டும். எனினும் குடமுழுக்கு நடைபெறவில்லை. தீவிர முயற்சிக்குபின் கடந்த 2 ஆண்டாக நடந்த திருப்பணி நிறைவுபெற்றதையடுத்து, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.